Published : 10 Jan 2023 08:37 PM
Last Updated : 10 Jan 2023 08:37 PM

“இது தமிழருடைய ஆட்சி” - கொளத்தூர் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கொளத்தூரில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்

சென்னை: "திமுகவினுடைய ஆட்சியை இது ஒரு கட்சியின் ஆட்சி என்று சொல்வது மட்டுமல்ல, இது தமிழருடைய ஆட்சி, தமிழருக்காக நடைபெறக் கூடிய ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய முதல்வர், கொளத்தூர் தொகுதிக்கு செய்யப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "பொங்கல் விழா என்பது தை திங்களை, அதை தமிழர்களுடைய பெருமையாகவும், தமிழர்களுக்கு எனக் இருக்கக்கூடிய ஒரு விழாவாகவும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 6-ஆம் தேதி சென்னையில் இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைத்தேன்.அதே நாள் மாலையில் சென்னையில் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தேன்.பன்னாட்டு புத்தகக் காட்சியும் நடக்க இருக்கிறது.சமத்துவப் பொங்கல் விழாவும் நடத்தப் போகிறோம். பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவை வருகிற 12-ஆம் தேதி தொடங்கப் போகிறோம்.

நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சங்கமும் இணைந்து சென்னை சங்கமத்தை 13-ஆம் தேதி நாம் தொடங்க இருக்கிறோம். ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவுகள் தொடங்க இருக்கிறது.

வெளிநாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களையெல்லாம் ஒன்று சேர்த்து, அயலகத் தமிழர் திருநாள் 11-ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. கீழடியில் அருங்காட்சியகம், தொல்பொருள் ஆராய்ச்சி, இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த கீழடி அருங்காட்சியத்தை விரைவில் திறந்து வைக்க இருக்கிறோம்.திருவள்ளுவர் திருநாள் அன்று தமிழ்ப் பெருமக்கள் பெயரில் விருதுகள் எல்லாம் வழங்கப்பட இருக்கிறது.

இப்படி தை மாதம் முழுக்க அரசின் சார்பிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், நம்முடைய கட்சியின் சார்பிலும் விழாக்கள் இந்த மாதம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.அதனால்தான், திமுகவினுடைய ஆட்சியை இது வெறும் கழக ஆட்சி என்று சொல்வது மட்டுமல்ல, இது தமிழருடைய ஆட்சி, தமிழருக்காக நடைபெறக்கூடிய ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய பழம் பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், இப்படிப்பட்ட விழாக்களை நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட விழாவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றைக்கும் நீங்கள் எனக்கு பக்கபலமாக இருக்கக்கூடியவர்கள். அதேபோல் நானும் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, தொடர்ந்து என்னுடைய கடமையை நிறைவேற்ற நீங்கள் எப்போதெல்லாம் உத்தரவிடுகின்றீர்களோ, அந்த உத்தரவை ஏற்று நிறைவேற்ற நான் காத்திருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x