Published : 29 Dec 2016 08:44 AM
Last Updated : 29 Dec 2016 08:44 AM
அதிமுக பொதுக்குழு இன்று கூடவிருக்கும் நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன்பாக திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கருணாநிதி, திமுக-வினரிடம் ஆதரவு கேட்டு கைப்பட எழுதிய கடிதம் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வியப்புக்குள்ளாக்கியது.
‘வணக்கம். அன்புசால் நண்ப ருக்கு, 27.7.69 நடைபெறும் நமது திமுக தலைமைக் கழக தேர்தலில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வேட்பாளராக நிற்கிறேன். ஒன்று பட்டுப் பழகிய இதயங்களுக்கு எந்த விரிவான விளக்கமும் தேவை யில்லை. என்றும் போல் தொடர்ந்து தொண்டாற்ற கடமைப்பட்டவன் நான். என்னைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். - அன்பு மறவாத மு.கருணாநிதி’ - இப்படி ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்ட அந்தக் கடிதம் எழுதப்பட்ட சூழல் குறித்து திமுக மூத்த நிர்வாகி இப்படி விளக்கம் சொன்னார்.
‘‘திக-விலிருந்து வெளியேறி திமுக-வை தொடங்கிய அறிஞர் அண்ணா, ‘நான் கண்டதும் கொண் டதும் ஒரே தலைவரைத்தான்; அது பெரியார்தான். எனவே, திமுக-வில் தலைவர் நாற்காலி என்றைக்கும் காலியாகவே இருக்கும்’’ என்று அறிவித்துவிட்டு பொதுச் செயலா ளர் பதவியில் இருந்தார். அப்போது திமுக-வில் பொதுச் செயலாளரிடம் தான் அனைத்து அதிகாரங்களும் இருந்தது.
3.2.69-ல் அண்ணா மறைந்ததும் இடைக்கால பொதுச் செயலாளராக நாவலர் நெடுஞ்செழியன் நியமிக்கப் பட்டார். அதேசமயம் அப்போது பொருளாளராக இருந்த கருணா நிதி, எம்.ஜி.ஆரின் ஆதரவோடு முதலமைச்சரானார். இருப்பினும் கட்சியின் அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் பதவி நாவலர் வசம் இருந்ததால் இரட்டை அதிகார மையம் போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் கட்சிக்குள் சில சலசலப்புகளும் கிளம்பின.
இதை சமாளிப்பதற்காக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு ஏற்பாடு செய்த கருணாநிதி, அந்தப் பதவிக் கும் தானே போட்டியிட விரும்பி னார். அந்த சமயத்தில் கட்சினரிடம் ஆதரவு கேட்டு எழுதிய கடிதம் தான் இது. ஜூலை மாதம் பொதுக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அந்தத் தேர்தலில் கருணா நிதிக்கு போட்டியாக நெடுஞ் செழியன் களமிறங்கினார். இதனால் கட்சிக்குள் கலகம் ஏற்படுமே என அஞ்சிய மதுரை முத்து உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள்.
பொதுச் செயலாளர் பதவியை நாவலருக்கு விட்டுத் தருவதாக இருந்தால் தலைவர் பதவி உரு வாக்கப்பட்டு அதில் தன்னை அமர்த்த வேண்டும் என்றார் கருணாநிதி. இது ஏற்கப்பட்டு, கருணாநிதி கட்சித் தலைவராகவும் நாவலர் பொதுச் செயலாளராகவும் ஆனார்கள். அப்போதே, பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு தலைவருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப் பட்டன. அந்த சட்ட திட்டங்கள் திமுக-வில் இன்றளவும் தொடர் கின்றன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT