ஏப்ரல் முதல் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய 442 தாழ்தள பேருந்துகள்: தமிழக அரசு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவற்றில் சென்னையில் 242 பேருந்துகளும் மதுரை மற்றும் கோவையில் தலா 100 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் சரி செய்யபட்டு வருகின்றன. இதனால் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் முழுமையாக பேருந்துகள் இயங்க முடியாத நிலை உள்ளது. சென்னையில் மட்டும் 37.4% பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் தயார் செய்யபட உள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தாழ்தள பேருந்துகள் என்பது மாற்றுத் திறனாளிகளுக்கானது எனக் கூறுவது தவறானது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறுவது இன்றளவும் சவாலானதாக உள்ளது. எனவே கொள்முதல் செய்யக்கூடிய பேருந்துகளில் நூறு சதவீத பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் மாற்றியமைக்க கூடாது? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பதால் நூறு சதவீதம் தாழ்தள பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், என்னென்ன தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in