வெளிமாநில தொழிலாளர் கணக்கெடுப்பை நடத்திய பிறகு தமிழக அரசின் ‘மக்கள் ஐடி’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

வெளிமாநில தொழிலாளர் கணக்கெடுப்பை நடத்திய பிறகு தமிழக அரசின் ‘மக்கள் ஐடி’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் கணக்கெடுப்பை நடத்திய பின்னர் ‘மக்கள் ஐடி’ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு இம்மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும், ‘மக்கள் ஐடி’ என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்ற பெயரில் 12 இலக்க எண் வழங்கப்பட்டு அதன் மூலம் அனைத்து சேவைகளையும் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வெளிப்படை தன்மை இல்லை: மேலும் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே இந்த ‘மக்கள் ஐடி’ பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ‘மக்கள் ஐடி’ திட்டம் எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால் நாட்டில் குழப்பம்தான் ஏற்படும். எனவே இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முன்பு மக்களிடம் அரசு கருத்துக் கேட்க வேண்டும்.

அதேசமயம் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்குக் கணக்கெடுப்பு நடத்திய பிறகு, ‘மக்கள் ஐடி’ போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in