சென்னை இலக்கியத் திருவிழா | படைப்பாளி வாசகர் இடைவெளியை குறைத்துள்ளது: செய்தித் துறை இயக்குநர் ஜெயசீலன் கருத்து

சென்னை இலக்கியத் திருவிழா | படைப்பாளி வாசகர் இடைவெளியை குறைத்துள்ளது: செய்தித் துறை இயக்குநர் ஜெயசீலன் கருத்து
Updated on
1 min read

சென்னை: சென்னை இலக்கியத் திருவிழா,படைப்பாளிக்கும், வாசகர்களுக்கும் உள்ள இடைவெளியைப் பெரிய அளவில் குறைத்துள்ளது என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் கூறினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகவளாகத்தில் கடந்த 6-ம் தேதி இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

இதில், பொதுநூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், அண்ணா நூற்றாண்டு நூலக இணை இயக்குநர் அமுதவள்ளி மற்றும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அண்ணா நூற்றாண்டு மற்றும் கன்னிமாரா நூலக அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நிறைவு விழாவில் பொதுநூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத் பேசியதாவது: சென்னை இலக்கியத் திருவிழாவுக்கு எதிர்பாராத அளவுக்கு வரவேற்புகள் கிடைத்துள்ளன. இந்த விழாவில் 25 கல்லூரிகளைச் சேர்ந்த, 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இலக்கியப் போட்டி நடைபெற்றது.

மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான தலைப்புகளை நுட்பமாக வடிவமைத்து, அவர்கள் உரையாற்ற அழைக்கப்பட்டனர். தமிழ் இலக்கியப் பரப்புக்கு முக்கியமான படைப்பான அந்த உரைகள் ஆவணப்படுத்தப்பட்டு, உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களுக்கு காணொலி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் பேசியதாவது: கடந்த 3 நாட்கள் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் 100 இலக்கியப் பண்பாட்டு ஆளுமைகள், படைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 10 ஆண்டுகள் நடத்தப்பட வேண்டிய நிகழ்வு, வெறும் 3 நாட்களில் நடத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சென்னை இலக்கியத் திருவிழா, படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் உள்ள இடைவெளியைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. புதிய படைப்பாளிகள், இலக்கியவாதிகளை உருவாக்குவது இந்த இலக்கியத் திருவிழாவின் நோக்கம் அல்ல. தேர்ந்த வாசகனுக்கு, மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான் இதன் நோக்கம். அந்தவகையில் இந்த இலக்கியத் திருவிழா வெற்றியடைந்துள்ளது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இலக்கியத் திருவிழாக்களின் பரப்பு இன்னும் பெரிய அளவில்விரிவடைய வேண்டும். இலக்கியத் திருவிழா தேர்ந்த வாசிப்பு அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது என்பதில் ஐயமில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in