கொலை வழக்கில் பொய் சாட்சி - போலீஸ் டிஎஸ்பி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த காவல் துணை கண்காணிப்பாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் அப்போனியன் ராஜ். இவர் தனது மனைவி மோட்ஷா ஆனந்த மேரியை குடி போதையில் கொலை செய்ததாக கோயம்பேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பரூக் விசாரித்தார்.

வழக்கின் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி, அப்போனியன் ராஜ் தனது மனைவியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை எனவும், சம்பவ இடத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை தாக்கியுள்ளார் என்பதும் தெளிவாகிறது என கூறினார். அதைத் தொடர்ந்து அவர் அப்போனியன் ராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில், அரசுத் தரப்பு சாட்சியான நெற்குன்றம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய ஜனார்த்தனன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் காவல் நிலையத்தில் வைத்து அப்போனியன் ராஜின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்று, அதைதனது அலுவலகத்தில் பெற்றதாகவும், புலன் விசாரணை அதிகாரிகேட்டுக் கொண்டதன் பேரில் காவல் துறைக்கு அறிக்கை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொய் சாட்சியம் தயாரித்த தற்போதைய சென்னை அசோக் நகர் சைபர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அழகு மற்றும் தற்போதைய மதுரவாயல் கிராம நிர்வாக அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in