

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2 சாதனைகளை விஞ்சியவர் ஜெயலலிதா. நீண்ட கால முதல்வர் என்ற கருணாநிதியின் சாதனையை முறியடிக்கும் முன் மரணம் அவரது உயிரைப் பறித்துக்கொண்டது.
தமிழக முதல்வராக இருந்த அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக முதல்முறையாக கருணாநிதி 1969-ம் ஆண்டு பொறுப்பேற்றபோது, அவரது வயது 44 ஆண்டுகள், 8 மாதங்கள்.
தமிழகத்தில் இளம் வயதில் முதல்வராகப் பொறுப்பேற்றவர் என்ற கருணாநிதியின் இந்தச் சாதனையை 22 ஆண்டுகள் கழித்து 43 வயது, 4 மாதங்களில் 1991 ஆண்டு ஜூன் 24-ம் முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்று ஜெயலலிதா முறியடித்தார்.
தமிழகத்தில் 2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வரானபோது, தமிழகத்தில் அதிக முறையாக 5-வது முறை முதல்வரானதே சாதனையாக இருந்த நிலையில் 2016-ம் ஆண்டு மே 23-ம் தேதி 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்று அதிகமுறை முதல்வர் என்ற சாதனையையும் ஜெயலலிதா விஞ்சினார்.
தமிழக முதல்வர் பொறுப்பை நீண்ட காலம்- 6,868 நாட்கள், அதாவது 18 ஆண்டுகள் 10 மாதங்கள் வகித்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ம் ஆண்டு முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி 5 முறை முதல்வராகி கடந்த 42 ஆண்டுகளில் சுமார் 19 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் முறையாக முதல்வராகி 5 ஆண்டு காலம் முழுமையாக முதல்வர் பொறுப்பு வகித்தார். அதன் பின், 2001-ம் ஆண்டு 2-வது முறையாக முதல்வரானார். டான்சி வழக்கு காரணமாக அதே ஆண்டில் பதவி விலகிய ஜெயலலிதா, மீண்டும் 2002-ம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்று 2006-ம் ஆண்டு வரை சுமார் நான்கரை ஆண்டுகள் முதல்வராகப் பொறுப்பு வகித்தார்.
2011-ம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்று 3 ஆண்டு 4 மாதங்கள் முதல்வர் பொறுப்பில் இருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக 2014-ல் பதவி விலகி, மீண்டும் 2015-ம் ஆண்டு பொறுப்பேற்று அதிமுக ஆட்சிக் காலம் முடியும் வரை என சுமார் நாலேகால் ஆண்டுகளுக்கு மேலாக என இதுவரை 5,045 நாட்கள் அதாவது 13 ஆண்டுகள் 10 மாதங்கள் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.
ஜெயலலிதா நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், 14 ஆண்டுகள் நான்கரை மாதங்கள் என 5,242 நாட்கள் தமிழக முதல்வராக இருந்து தமிழகத்தின் நீண்ட கால முதல்வர்கள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2 சாதனைகளை முறியடித்த நிலையில், நீண்ட கால முதல்வர் சாதனையை அவர் நிகழ்த்தும் முன் மரணம் அவரது உயிரைப் பறித்துக்கொண்டது.