அனைத்து போராட்டங்களுக்கும் இதே அணுகுமுறைதானா? - ஆர்எஸ்எஸ் வழக்கில் காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரி காவல் துறையிடம் அளித்துள்ள விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் எனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், ‘இதே அணுகுமுறைதான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்கள் தவிர 41 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, "ஜனவரி 29-ம் தேதி அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். எனவே, அந்த மனுவை பரிசீலிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என ஆர்எஸ்எஸ் தரப்பில் கோரினர். இதையடுத்து, ஆர்எஸ்எஸ் தரப்பில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், "கடந்தமுறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29-ம் தேதி அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவரும் இந்த வழக்கை மேற்கோள்காட்டி, ஆர்எஸ்எஸ் தரப்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுதந்திரமான முறையில் இந்த விண்ணப்பங்கள் அளிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

அந்த விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், “இதே அணுகுமுறைதான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா?” என கேள்வி எழுப்பினர்.

பின்னர், ஆர்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in