Published : 05 Jan 2023 04:31 AM
Last Updated : 05 Jan 2023 04:31 AM

பபாசியின் 46-வது சென்னை புத்தகக் காட்சி - நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 46-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.6-ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பபாசி தலைவர் எஸ்.வயிரவன், துணைத் தலைவர் பெ.மயிலவேலன், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஏ.குமரன் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: பபாசியின் 46-வது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முதன்முறையாக கண்காட்சியில் ஆயிரம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 46-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை (ஜன.6) தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பபாசியின் தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பொற்கிழி விருது: நடப்பாண்டு அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புத்தகக் காட்சி மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 6-ம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் தேவி பாரதி (நாவல்), சந்திராதங்கராஜ் (சிறுகதை), தேவதேவன்(கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகிய 6 பேருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதனுடன் பபாசி சார்பில் ‘பதிப்பகச் செம்மல்’ விருது உட்பட சிறப்பு விருதுகளும் அளிக்கப்படும்.

கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில் குழந்தைகளின் சிறார் நூல்களுக்கு பிரத்யேக அரங்கம் அமைக்கப்படுகிறது. திருநங்கையர்களால் நடத்தப்பட்டு வரும் ‘குயர் பப்ளிசிங் ஹவுஸ்’ நிறுவனத்துக்கும் தனி அரங்கம் தரப்பட்டுள்ளது. கண்காட்சியில் இலங்கை, சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தினமும் மாலையில் நடைபெறும் சிந்தனை அரங்கில் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சியை நடத்தவுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது. அதன்படி பபாசி நடத்தும் புத்தக காட்சிக்கு அருகே இதற்காக தனிஅரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச புத்தகக் காட்சி ஜன.16, 17, 18-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 30 முதல் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

கரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசு வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றி கண்காட்சியை நடத்துவோம். இந்த முறை வாகன நிறுத்தம், தொலைத்தொடர்பு வசதிகள் மேம்பாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்கள் வழங்க உள்ளோம். கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையதளத்தில் அறியலாம்.

பதிப்பாளர்களுக்கு அரங்கம் ஒதுக்கப்பட்டதில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை. குறைந்த அளவிலான புத்தகங்கள் கொண்டவர்களுக்கு தனி அரங்குகள் வழங்க முடியாத சூழல் உள்ளது. அவர்களுக்கு அலமாரிகள் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புத்தகக் காட்சியை தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x