

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உரிய முகாந்திரத்துடன் உச்ச நீதிமன்றத்தில் முந்தைய அதிமுக அரசு வழக்கு தொடரவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மருத்துவ மாணவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவும், நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் வகையிலும் தேவையான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் உரிய முகாந்திரத்துடன் முந்தைய அதிமுக அரசு வழக்குதாக்கல் செய்யாமல், காலாவதியான சட்டங்களின் கீழ் கடமைக்காக வழக்கை தவறாக தாக்கல் செய்துள்ளதாலும் அதை தொடர்ந்து நடத்தினால், தமிழக மாணவர்களுக்கு பாதகமான சூழல் ஏற்படும் என்பதாலும் தமிழக அரசு வழக்கை சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
உண்மை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சித் தலைவர் முந்தைய ஆட்சியின் அவலங்களை மறைப்பதோடு இதுபோன்ற மக்களை திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.