Published : 04 Jan 2023 03:29 PM
Last Updated : 04 Jan 2023 03:29 PM

சென்னை புத்தகக் கண்காட்சியில் முதன்முறை: திருநங்கையர் நடத்தும் பதிப்பகத்திற்கு அரங்கம் ஒதுக்கீடு

சென்னை புத்தகக் காட்சி | கோப்புப் படம்

சென்னை: சென்னை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக திருநங்கையர் நடத்தும் அரங்கம் இடம்பெறுகிறது. இதுபோல் உலக புகழ்பெற்ற பல்வேறு பதிப்பகங்களும் கலந்து கொள்கின்றன.

சென்னை புத்தகக் காட்சி தொடர்பாக பபாசி தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் எஸ். கே.முருகன் கூறுகையில்," 46 ஆவது சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தக காட்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16 முதல் 18 வரையிலான மூன்று நாட்கள் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி நடைபெறுகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளார்கள். இப்புத்தகக் காட்சியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார்.

புத்தகக்காட்சி காலை 11 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை நடைபெறும். 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டில் இருந்தும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, நேஷனல் புக்டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள்.இல்லம் தேடிக் கல்வி இயக்கம் கலந்து கொள்கிறது.

இலங்கை, சிங்கப்பூரில் இருந்தும் தமிழ் பதிப்பகங்கள் பங்கேற்கிறார்கள். உலக அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களான PENGUIN RANDOM HOUSE INDIA, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. இலங்கை, சிங்கப்பூரில் இருந்தும் தமிழ் பதிப்பகங்களுக்கு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநங்கையரால் நடத்தப்பட்டு வரும் Queer publishing house நிறுவனத்திற்கும் பிரத்தியோகமாக அரங்கம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் தமிழ் புத்தக விற்பனையாளர்கள் வருகை தருகிறார்கள். கரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகக் காட்சிக்கு வர இயலாத காரணத்தினால் இந்த ஆண்டு அதிக அளவு புலம் பெயர் எழுத்தாளர்கள் வருகை தர உள்ளார்கள்" இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x