Published : 04 Jan 2023 02:52 PM
Last Updated : 04 Jan 2023 02:52 PM

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ மரணம்: தலைவர்கள் இரங்கல்

மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா

சென்னை: மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி: "ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தந்தை பெரியார் பாரம்பரியத்தில், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின் அரசியல் பாதையைப் பின்பற்றி, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். சமூக ஊடகத்துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை பரப்பியவர்.

46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் . ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

காங்கிரஸ் கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றியதோடு, அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளைச் செய்து வந்தார். வாழ வேண்டிய 46 வயதிலேயே அவர் இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, என்னுடைய துயரத்தையும், இரங்கலையும் தெரிவித்தேன். தாங்க முடியாத இந்த துக்கத்தை அவரோடும், அவரது குடும்பத்தினரோடும், காங்கிரஸ் கட்சியினரோடும் பகிர்ந்துகொண்டு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது

திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச இளங்கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x