சென்னை அருகே கரையை கடக்கிறது வர்தா புயல்: தமிழ்நாடு வெதர்மேனின் சிறப்புப் பகிர்வு

சென்னை அருகே கரையை கடக்கிறது வர்தா புயல்: தமிழ்நாடு வெதர்மேனின் சிறப்புப் பகிர்வு
Updated on
2 min read

வர்தா புயல் மேலும் தீவிரமடைந்து நாளை சென்னையிலேயே அல்லது சென்னை அருகே கரையைக் கடக்கும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையைக் கடக்கும். 1994-ம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வளவு சீற்றத்துடன் புயல் கரையை கடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.

வர்தா புயலானது சென்னை அருகே அல்லது சென்னையிலேயே கரையை கடக்கும்போது சென்னையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுவீச வாய்ப்புள்ளது. இதுமாதிரியான நிகழ்வு கடைசியாக கடந்த 1994-ம் ஆண்டு நிகழ்ந்தது. 2010-ல் சென்னையில் கரையை கடந்த ஜல் புயலும், 2012-ல் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்த நிலம் புயலும் எதிர்பார்த்ததைவிட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தின. இதனால், புயல் கரையை கடக்கும்போது எப்படி இருக்கும் என்பதை பலரும் மறந்திருக்கலாம் அல்லது எப்படி இருக்கும் என்பதை இதுவரை கண்கூடாக அனுபவிக்காமல்கூட இருந்திருக்கலாம்.

1994-ம் ஆண்டு மணிக்கு 116-ல் இருந்து 132 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையை கடந்தபோது அது ஏற்படுத்திய தாக்கத்தை அதன்பின்னர் செய்தித்தாள்களில் வந்த புகைப்படங்களை சேர்த்துவைத்துப் பார்த்து உணர்ந்தேன். அப்போது நான் பள்ளி மாணவன். 1994-ல் தான் புயலின் மையக் கண்ணானது சென்னையைக் கடந்தது.

கீழே இணைக்கப்பட்டுள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்வீர்.காற்று, கனமழை, கடல் நீர்மட்ட உயர்வு இருக்கும். புயல் நாளை மாலை கரையைக் கடந்துவிடும்.22 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை மிரட்டும் புயல் ஒன்று உருவாகியிருப்பதாகவே நான் உணர்கிறேன். எனவே, சென்னை அல்லது சென்னை அருகே வர்தா நாளை கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். வர்தா புயல் வலுப்பெற்று மையக் கண் பெற்றிருக்கிறது.

கரையை நெருங்கும்போது தற்போது இருப்பதைவிட சற்றே வலுவிழந்தாலும் தீவிர புயலாகவே கரையைக் கடக்கும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். அதன் தாக்கம் நாளை மாலைவரை படிப்படியாக அதிகரிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டுமல்லாது வேலூர் மாவட்டத்திலும் மழை பெய்யும். புயலால் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது நல்லது. ஒருசில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பிருக்கிறது.

நாளை நாம் என்ன செய்யலாம்?

இயல்பாக இதுபோன்ற தகவல்களை நான் பதிவதில்லை இருந்தாலும் சொல்கிறேன் பள்ளிக் குழந்தைகள் விடுப்பு எடுத்துக் கொள்வது நலம். மற்றவர்களும் அலுவலகம் செல்லாமல் முடிந்தவரை வீட்டிலிருக்கலாம். வருடத்தில் இதுபோல் என்றாவது ஒரு நாள் மட்டுமே கன மழை பெய்யும். எனவே, வெளியில் சென்று எவ்வித ஆபத்தையும் எதிர்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பால்கனியில் ஒரு கோப்பை தேநீர் அல்லது காப்பியுடன் மழையை ரசிப்பதைவிட அமைதியளிப்பது எதுவாகவும் இருக்க முடியாது. நாளை கடற்கரைக்கு செல்லாதீர். கடந்த 2011-ல் தானே புயல் தாக்கியபோது கடல்நீர் சென்னை மெரினா அருகே காமராஜர் சாலை வரை எட்டிப் பார்த்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். மரங்களுக்குக் கீழ் வாகனங்களை நிறுத்தாதீர்.

நாளை சென்னையில் பரவலாக பல பகுதிகளில் நிச்சயமாக மின்வெட்டு இருக்க வாய்ப்பு அதிகம். மொபைல் போன். லேப்டாப் சார்ஜ் செய்துவைத்துக் கொள்ளவும். புயல் கரையைக் கடக்கும்வரை அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வருவேன். கடந்த 2015 டிசம்பர் 1-ம் தேதிபோல் இப்போதும் இருக்குமா எனக் கேட்காதீர். அப்போதைய சூழல் வேறு இப்போதைய நிலை வேறு.

நமக்கு இப்போது கனமழை கிடைத்தால்தான் நமது ஏரிகள் நிரம்பும். வர்தாவுக்குப் பின் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வையும் எதிர்பார்க்கலாம். 'வர்தா' 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் நமக்கு அவசியமான நீராதாரம் கிடைக்கும் என்ற எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இருந்தாலும்கூட அக்டோபர், நவம்பரில் நமக்குக் கிடைகாமல்போன மழையளவை ஈடு செய்யுமா என்பது சந்தேகமே.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஃபேஸ்புக் பக்கத்துக்கான இணைப்பு: >https://www.facebook.com/tamilnaduweatherman/?fref=ts

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in