Published : 03 Jan 2023 09:38 PM
Last Updated : 03 Jan 2023 09:38 PM

சுருக்குமடி வலை உரிய இடத்தில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை யார் கண்காணிப்பது? - உச்ச நீதிமன்றம் கேள்வி 

கோப்புப்படம்

புதுடெல்லி: சுருக்குமடி வலை உரிய இடத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை யார் கண்காணிப்பது என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், சுருக்குமடி வலை பயன்பாட்டை முறைபடுத்துவது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மீன் பிடிக்க சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து பிஷ்ஷர்மேன் கேர் என்ற மீனவர்கள் அமைப்பு மற்றும் மீனவர்கள் சார்பில் சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க சுருக்கு மடி வலையை எடுத்து செல்ல அனுமதிப்பது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழக அரசு தாக்கல் செய்த, பிரமாணப் பத்திரத்தில், சுருக்கு மடி வலையை ஒருமுறை அனுமதித்தால், அது எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிப்பது மிகவும் கடினமான காரியம். சுருக்குமடி வலை பயன்பாடு கடல் உரியினங்களின் உணவுச் சங்கிலியை பாதிக்கும். மேலும் சரி செய்ய முடியாத அளவுக்கு கடல் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, திபான்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, சுருக்குமடி வலைக்கு ஆதரவான மீனவர்கள் அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் சிராஜூதீன், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தமிழக அரசு தெரிவிக்கும் அச்சத்தின்படி 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால்தான் சுருக்குமடி வலை பயன்படுத்தப்படுகிறதா என்பதை யார் கண்காணிப்பது? மாநில அரசா? மத்திய அரசா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கினால் அவை உரிய இடத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை யார் கண்காணிப்பது என்பது குறித்தும், சுருக்குமடி வலை பயன்பாட்டை முறைப்படுத்துவது குறித்தும் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேநேரம், இந்த மீன்பிடி தொழில் என்பது வருவாய் ஈட்டி பொருளாதாரத்துக்கு உதவும் தொழில். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x