

கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஷார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் புறப்பட்டது. அதில், பயணிகள், விமான பணியாளர்கள் என 170 பேர் பயணித்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் இரண்டு கழுகுகள் மோதியதால், விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதில், ஒரு பறவை உயிரிழந்தது. இதுதொடர்பாக விமானநிலைய அதிகாரிகள் கூறும்போது, “அருகில் வீடு உள்ள பயணிகள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றவர்கள் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.
பறவை மோதியதால் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. கோவை விமானநிலையத்தில் விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போது பறவைகளை விரட்டு வதற்கென்றே ஷிப்ட் முறையில் 6 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் சிறிய அளவிலான பட்டாசுகள் வெடித்து பறவைகளை விரட்டி வருகின்றனர். சுற்றுவட்டார இறைச்சி கடைகளை கண்காணித்து அவ்வப்போது கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.