Published : 03 Dec 2016 12:06 PM
Last Updated : 03 Dec 2016 12:06 PM
ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் புதிய உலக சாதனை படைப்பேன் என தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு நம்பிக்கை தெரிவித்தார்.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு, ‘மரம் மதுரை’ அமைப்பு சார்பில் மதுரையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
முன்னதாக, மாற்றுத்திறனாளி வீரர்களை ஊக்குவிக்கவும், பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் சாலையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் போட்டியைத் தொடங்கி வைத் தார். இதில் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டார்.
இதையடுத்து ராஜா முத்தையா மன்றம் முதல் தெப்பக்குளம் வரை திறந்த வாகனத்தில் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் பொதுச்செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாரியப்பன் தங்கவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தடகள போட்டிகளில் சாதிக்கும் அளவுக்கு, ஒவ்வொரு கிராமத்திலும் மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை பள்ளிகள் வெளிக்கொண்டு வருவது மிகவும் அவசியம்.
ரியோ பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றேன். உயரம் தாண்டுதலில் 1.92 மீட்டர் என்பதுதான் உலக சாதனையாக உள்ளது. தற்போது பயிற்சிகளின்போது 1.96 மீட்டர் வரை தாண்டி வருகிறேன். 2020 டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீ. வரை தாண்டி புதிய உலக சாதனை படைப்பேன். அதற்கான கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
பயிற்சியாளர் சத்தியநாராயணா பேசியதாவது: தடகள போட்டிகளில் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகளை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. வரும்காலங்களில் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வெல்வது நிச்சயம். மாரியப்பன் தங்கவேலு தற்போது பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து நடைபெற உள்ள லண்டன் தடகள போட்டி, ஆசிய தடகள போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT