Published : 02 Jan 2023 03:59 PM
Last Updated : 02 Jan 2023 03:59 PM

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம்  முடித்துவைப்பு

கோப்புப்படம்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வந்தது.

இந்நிலையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு, ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு, டிசம்பர் 22-ம் தேதி அறிவித்தது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையை நிம்மதியாக கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிசம்பர் 24-ம் தேதி அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்" என்று தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x