Published : 02 Jan 2023 07:45 AM
Last Updated : 02 Jan 2023 07:45 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ரங்கா, ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பாண்டியன் கொண்டை, ரத்தினங்கி, கிளி மாலை அணிந்து சொர்க்கவாசலைக் கடந்து வந்த நம் பெருமாள் | படம்: ஜி.ஞானவேல் முருகன்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம் என்றும். பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் நடுவே தீவு போன்ற பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் மிகவும் பழமையானது.

இத்திருக்கோயிலில் வீற்றுள்ள ரங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்துமே சிறப்பு வாய்ந்தது என்றாலும், இதில் முக்கிய திருவிழாவான திருஅத்யயன உற்சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

பகல் பத்து திருமொழி திருநாள், ராப்பத்து திருவாய்மொழி திருநாள் என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா டிச.22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து திருநாள் 23-ம் தேதி தொடங்கி ஜன.1-ம் தேதி வரையில் நடைபெற்றது. பகல் பத்து திருநாட்களில் உற்சவரான நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

மோகினி அலங்காரம்

பகல் பத்து திருநாளின் 10-ம் திருநாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) காட்சியளித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து திருநாள் முடிவுற்று ராப்பத்து திருநாள் இன்று தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய உற்சவமான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 2.30 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாள் ஆகியோருக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து அதிகாலை 3.30 மணியளவில் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கோட்டான் வாயில், தங்கக் கொடிமரம் வழியாக, பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை ஓதினர்.

இதைத் தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார்.

சொர்க்கவாசலைக் கடந்து வந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, ராமர் சன்னதி, நடைப்பந்தல் வழியாக 5-ம் பிரகாரம் எனப்படும் திருக்கொட்டகை பகுதிக்கு வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

தொடர்ந்து, மாலையில் அரையர் சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல் உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைவார்.

சொர்க்கவாசல் திறப்பு விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

விழாவையொட்டி மாநகர காவல் ஆணையர் க. கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் , தீயணைப்பு வீரர்கள் என ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரசத் தேவைக்கு மருத்துவக் குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x