Published : 01 Jan 2023 07:14 PM
Last Updated : 01 Jan 2023 07:14 PM

அசம்பாவித சம்பவங்கள் இல்லாத புத்தாண்டு: சென்னை பெருநகர காவல்துறை

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல், அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், விபத்தில்லா புத்தாண்டாக மகிழ்ச்சியுடன் அமைவதற்கும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மொத்தம் 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதை தடுக்கவும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. பொது மக்களின் பாதுகாப்பை கருதி 33 மேம்பாலங்கள் தற்காலிக தடுப்புகள் மூலம் மூடப்பட்டது.

மேலும் முக்கிய இடங்களில் தற்காலிகமாக 78 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தேவைப்படும் இடங்களில் விரைந்து மருத்துவ உதவி அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

13,036 வாகனங்களை சோதனை செய்து, விதிமீறல்களில் ஈடுபட்ட 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மொத்தம் 694 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் பொது மக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல், விபத்தில்லா புத்தாண்டாக மகிழ்ச்சியுடன் கொண்டாட காவல் துறையினர், தமிழக அரசின் உத்தரவின் பேரில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ததின் காரணமாக, சென்னையில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் புத்தாண்டை, பொதுமக்கள் அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர். காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x