Published : 17 Dec 2016 03:03 PM
Last Updated : 17 Dec 2016 03:03 PM

கருணாநிதியைப் பார்க்க நண்பர்கள், தொண்டர்கள் வர வேண்டாம்: திமுக வேண்டுகோள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், கருணாநிதியை நேரில் பார்க்க வராமல் திமுக நண்பர்கள் ஒத்துழைக்குமாறு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ''காவேரி மருத்துவமனையிலிருந்து உடல் நலம் தேறி, கடந்த 7-ம் தேதி அன்று இல்லம் திரும்பி ஓய்வெடுத்து வந்த தலைவர் கருணாநிதிக்கு கடந்த 15-ம் தேதி அன்று தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் காவேரி மருத்துவ மனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்றையதினம் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ''தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றுக் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு மூச்சு விடுவதை இலகுவாக்குவதற்கான டிராகோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கருணாநிதி மேலும் சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், அவரை நேரில் பார்க்க வராமல் கழகத் தோழர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் அன்புகூர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x