

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணாக அவதரித்த ஆண்டாள், பூமாலை சூடி பின் பாமாலை பாடி, ஸ்ரீரங்கநாதரை அடைய தேர்வு செய்த மாதமே மார்கழி ஆகும். இந்த மாதத்தில்தான் பாவை நோன்பு நோற்று, திருப்பாவை பாடி ஸ்ரீ அரங்கநாத பெருமாளை ஆண்டாள் அடைந்ததாக ஐதீகம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘மார்கழி மாதம் முப்பதும் தப்பாமே’ எனும் தலைப்பில், திருப்பாவை முற்றோதல் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்துகொண்டு ஆண்டாளுக்கு சீர்வரிசை அளித்தனர்.
ஆண்டாள் சன்னதி முன்பு உள்ள திரு ஆடிப்பூரக் கொட்டகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பட்டம் சடகோப ராமானுஜர் ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ரெங்க ராமானுஜ ஜீயர், வீரவநல்லூர் குலசேகர ராமானுஜர் மடம் ஸ்ரீ ராம பிரம்மேய ராமானுஜ ஜீயர் ஆகியோர் பங்கேற்று மங்களாசாசனம் பாடி திருப்பாவை முற்றோதல் நகர்வலத்தை தொடங்கி வைத்தனர்.