Published : 31 Dec 2022 07:29 AM
Last Updated : 31 Dec 2022 07:29 AM

ஏற்காடு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் - சேலம் காவல்துறை அறிவுறுத்தல்

சேலம்: புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காடு வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் கரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழையோ, கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்யும் பரிசோதனை சான்றிதழையோ வைத்திருக்க வேண்டும்,என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலம். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, புதிய வகை கரோனா தொற்றுப் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதாலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் அசம்பாவிதம் ஏதுமின்றி நடைபெறவும் சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதுகுறித்து டிஎஸ்பி தையல்நாயகி கூறியதாவது: ஏற்காடு வரும் சுற்றுலா வாகனங்கள், ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடியில் தணிக்கை செய்யப்படும். அதில், வெளிமாநில சுற்றுலாப் பயணிகள், கரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே ஏற்காடு செல்ல அனுமதிக்கப்படுவர். மதுபாட்டில்கள் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள்: ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளின் நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மது அருந்திவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது.

விடுதிகளில் பொது அமைதிக்குகுந்தகம் ஏற்படாமல் இருக்க, கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

புத்தாண்டு நிகழ்ச்சிகளை 31-ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி, அரை மணி நேரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது.

புதிய கட்டுப்பாடுகள்: சட்டம் ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, கேலி கிண்டல் செய்வது கூடாது. நிகழ்ச்சிகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், காட்சி முனைப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டிஎஸ்பி தையல்நாயகி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x