Published : 30 Dec 2022 04:52 AM
Last Updated : 30 Dec 2022 04:52 AM

பிரியங்கா காந்தி தலைமையில் தமிழகத்தில் மகளிர் பேரணி - மாநில காங்கிரஸ் தலைவர் தகவல்

சென்னை: தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக, ‘அரசியலமைப்பை பாதுகாப்போம் - கையோடு கைகோர்ப்போம்' என்ற பரப்புரையை தமிழகத்தில் முன்னெடுப்பது தொடர்பான கட்சியின் மாவட்ட தலைவர்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 100 காங்கிரஸ் கொடிகள் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக வீடு வீடாக சென்றுமக்களை சந்திக்கும் விதமாக ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்- கையோடு கைகோர்ப்போம்' என்ற பரப்புரையை ஜனவரியில் தொடங்க இருக்கிறோம். இது தொடர்பாக மாவட்ட தலைவர்களுடன் விவாதிக்கும் கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. இந்த பரப்புரையை மாநிலஅளவில் ஜனவரி 15-ம் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் 16 முதல்30-ம் தேதிக்குள் முடிக்கவும், ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை முடக்கி வைத்திருக்கும் தமிழக ஆளுநருக்கு எதிராகபோராட்டம் நடத்த வேண்டிஇருக்கும் என எச்சரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‘அரசியலமைப்பை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம்' பரப்புரையில் இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்த ஸ்டிக்கரை ஒவ்வொரு வீட்டின் கதவிலும் ஒட்டுவது, அந்த நடைபயணத்தில் சிறப்பை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்பட உள்ளது. அதில் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை பிரியங்கா வெளியிட உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், ஆ.கோபண்ணா, மாநில எஸ்சி அணி தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x