Published : 30 Dec 2022 05:08 AM
Last Updated : 30 Dec 2022 05:08 AM
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன் (46). இவர், தனக்கு சொந்தமான ஃபைபர் படகில், வாணகிரியைச் சேர்ந்த பொம்மநாட்டான் மகன் சக்திவேல் (20), அஞ்சப்பன் மகன் சக்திவேல் (40), திருச்செல்வம் (22) ஆகியோருடன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையிலிருந்து டிச.27-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.
அவர்கள் நேற்று அதிகாலை இலங்கையை அடுத்த வல்வெட்டு துறை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 4 பேரையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!