Published : 30 Dec 2022 04:10 AM
Last Updated : 30 Dec 2022 04:10 AM

சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? - இலங்கையை சேர்ந்த 10 பேரை விசாரிக்கும் என்ஐஏ மனு மீது ஜன.2-ல் விசாரணை

சென்னை: இலங்கையைச் சேர்ந்த 10 பேரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனு மீதான விசாரணை ஜனவரி 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்தனர்.

தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 22 இடங்களில் சோதனை நடத்தினர். திருச்சி சிறப்பு முகாமிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லேப்டாப், வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து திருச்சி சிறப்பு முகாமிலிருந்த குணசேகரன் என்ற பிரேம்குமார், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா உள்ளிட்ட இலங்கையைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சர்வதேச போதை கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த 10 பேரையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

மனுவை ஜனவரி 2-ம் தேதி மீண்டும் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட 10 பேரும் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x