Published : 23 Jul 2014 11:06 AM
Last Updated : 23 Jul 2014 11:06 AM

‘கல்விக் கட்டணம் செலுத்த எஸ்சி, எஸ்டி மாணவர்களை அவசரப்படுத்த கூடாது’

தனியார் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களை கல்விக் கட்டணம் செலுத்தச்சொல்லி அவசரப்படுத்தக்கூடாது என்று கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.டில்லிபாபு, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களை கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்வதாக குற்றம் சாட்டினார்.

அதற்கு அமைச்சர் பழனியப்பன் பதிலளித்து பேசியதாவது:

மாணவர் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொறியியல் படிப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 21,259 பேரும், மருத்துவப் படிப்பில் 37,146 பேரும் பயன்பெற்று வருகின்றனர். அந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றும், கட்டணத்தை உடனடியாக கட்டச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x