Last Updated : 29 Dec, 2022 06:14 PM

 

Published : 29 Dec 2022 06:14 PM
Last Updated : 29 Dec 2022 06:14 PM

அகவிலைப்படி உயர்வு நிலுவை கோரி சாலை மறியல்: மதுரையில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 1100 பேர் கைது

மதுரையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 

மதுரை: மதுரையில் அகவிலைப்படி உயர்வு பாக்கி உள்பட பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 1100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் ஓய்வூதியர்களுக்கு 86 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மாதத்தின் முதல் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நீதிமன்ற உத்தரவுக்கு பெறப்பட்ட தடையாணையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று சாலை மாறியல் போராட்டம் நடத்தினர்.

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆர். தேவராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் வி. பிச்சை ராஜன், மாவட்ட செயலாளர் அ.பால்முருகன் மற்றும் பலர் பேசினர்.

பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 1100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் தேவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஓய்வூதியர்களுக்கு 2015 நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு பாக்கி வழங்க வேண்டியதுள்ளது. அதிமுக ஆட்சி செய்த தவறுகளை தற்போதைய திமுக ஆட்சியும் செய்து வருகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை வழங்காமல் தடையாணை பெற்றுள்ளனர். தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x