Last Updated : 29 Dec, 2022 01:12 PM

 

Published : 29 Dec 2022 01:12 PM
Last Updated : 29 Dec 2022 01:12 PM

புதுச்சேரியில் 12 ஆண்டுகளில் கடலில் மூழ்கி 186 பேர் உயிரிழப்பு: ஆர்டிஐயில் தகவல்

படங்கள்: சாம்ராஜ்

புதுச்சேரி: கடலின் ஆழம், சீற்றம் தெரியாமல் அழகை ரசித்தப்படி கடலில் மூழ்கி வெளிமாநிலத்தவர் உயிரிழப்பு புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில் 186 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் 18 பேர் வரை பலியாகியுள்ளனர்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் முதலில் கண்டு மகிழ்வது புதுச்சேரி கடற்கரையை தான். இந்த கடற்கரையில் இயற்கையாக மணல் நிறைந்த மணல் பரப்பு இல்லை.

புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பை தடுத்து, செயற்கை மணல்பரப்பை உருவாக்க மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ.25 கோடியில் நவீன தொழில்நுட்பத்தில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக முகத் துவாரத்தில் சேர்ந்துள்ள மணலை அள்ளி தூர்வாருவதற்காக விசாகப் பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் 'டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனத்துடன் புதுச்சேரி துறைமுகம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ரூ.14.89 கோடி செலவில் நடந்தது. இதனால் புதிய கடற்கரை மணல் பரப்பு உருவானது. கடந்த 2018ல் இப்பணி நடந்தது. அதன்பின்னர் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது பலியாவது அதிகரித்துள்ளது. ஆனால் அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் ஏற்படுத்தவில்லை. கடலில் சிக்கியோரை மீட்க நடவடிக்கையும் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி கடற்கரையில் இதுவரை எவ்வளவு பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி விண்ணப்பித்து தகவல் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக ரகுபதி கூறியதாவது, ”புதுச்சேரி கடற்கரையில் கடந்த 2010 முதல் 12 ஆண்டுகளில் 186 பேர் உயிரிழந்துள்ளனர். செயற்கை மணல் பரப்பு உருவாக்கத்தொடங்கிய 2017ல் அதிகளவாக 28 பேரும், 2018 மற்றும் 2019ல் தலா 19 பேரும், கடந்த 2021ல் 14 பேரும், நடப்பாண்டில் இதுவரை 18 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று ஆர்டிஐயில் தகவல் தந்துள்ளனர்.

வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் கடல் அழகை ரசிக்கும்போது உற்சாக மிகுதியால் கடலில் குளிக்கச் செல்கின்றனர். அவர்களுக்கு கடலின் ஆழம், சீற்றம் தெரியவில்லை. அதனால் கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தவர்தான்.

முக்கியமாக கடற்கரையில் நீச்சல் பயிற்சி பெற்ற காவலர்களை அரசு நியமிக்கவில்லை. அதிக இடங்களில் எச்சரிக்கை பலகை மற்றும் முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை. புத்தாண்டு கொண்டாடத் தேடலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். சுமார் இரண்டரை கிலோ மீட்டர் புதுச்சேரியில் நூற்றுக்கணக்கானோர் உயிர் பலி ஏற்படுவது தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை இல்லை.

அதிக சுற்றுலா பயணிகள் வரும் கடற்கரையில் கடலில் இறங்கி உயிரிழப்பை தடுக்க காவல்துறை, வருவாய்துறை, நகராட்சி ஒருங்கிணைந்து பாதுகாப்புக்குழு ஏற்படுத்தி 200மீட்டருக்கு இரண்டு நபர்களை நிறுத்தி கடலில் குளிப்போரை எச்சரிக்க வேண்டும்.

கடலில் மூழ்கி உயிரிழந்தோர் விவரங்கள் பெயர் பலகையாக சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் கடற்கரைச் சாலையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இதுதொடர்பாக ஆளுநரிடமும், உள்துறை அமைச்சரிடமும் மனுவாக தந்துள்ளேன்" என்றார். சுற்றுலா பயணிகளை காக்க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x