Last Updated : 28 Dec, 2022 05:44 PM

 

Published : 28 Dec 2022 05:44 PM
Last Updated : 28 Dec 2022 05:44 PM

முன்ஜாமீன் பெற்ற சாமியாருக்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

பிரதிநிதித்துவப்படம்

மதுரை: அனுமதியில்லாமல் புலி, மான் தோல் வைத்திருந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சாமியாருக்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எம்.தவயோகி ஞானதேவபாரதி. இவர் புலி மற்றும் மான் தோலில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இவரிடமிருந்து புலி, மான் தோலை வனத்துறை போலீஸார் பறிமுதல் செய்து, அனுமதியில்லாமல் விலங்குகள் தோல் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரக் கோரி தவயோகி ஞானதேவபாரதி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், எனது பாஸ்போர்ட் காலவதியாகிவிட்டது. அதை புதுப்பிக்கக் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளேன். இதுவரை புதுப்பிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''இந்த வழக்கில் மனுதாரர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, அரசு தரப்பில் மனுதாரர் 200 ஆண்டு பழமையான புலி, மான் தோல் வைத்திருந்துள்ளார். அந்த தோல் மீது அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். விலங்குகளின் தோல்களை வைத்திருக்க வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு எந்த அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்பட்டது.

இதையடுத்து அந்த புலி, மான் தோல்கள் மிகப் பழமையானது, புதியது அல்ல என்பதால், மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் மனுதாரருக்கு பாஸ்போர்ட்டை உடனடியாக புதுப்பித்து வழங்க வேண்டும். 6 மாத காலத்துக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x