Last Updated : 27 Dec, 2022 02:29 PM

 

Published : 27 Dec 2022 02:29 PM
Last Updated : 27 Dec 2022 02:29 PM

ஜன.5 முதல் பாண்லேக்கு பால் சப்ளை இல்லை: புதுச்சேரி அரசுக்கு பால் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை

புதுச்சேரி பாண்லே பால் பண்ணை வாயிலில் பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி உற்பத்தியாளர்கள் பாண்லே பால் பண்ணையை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 5-ம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை பால் அனுப்புவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி அரசு சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், குருமாம்பேட்டில் உள்ள பாண்லே பால் பண்ணை முன்பு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் ரகு, அன்புமணி முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் திரளான பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறுகையில், "பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.45-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் வழங்குவதுபோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

75 விழுக்காடு மானிய விலையில் தீவனத்துக்கான பணத்தை உடனடியாக வழஙகிட வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பாண்லே ஒன்றிய தேர்தலை உடனே நடத்த வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உற்பத்தியாளர்கள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசோ, முதல்வரோ இதில் நடவடிக்கை எடுக்காததால், இன்று முற்றுகை போராட்டம் நடத்துகிறோம். வரும் 5-ம் தேதி முதல் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பாண்லே பால் அனுப்புவதை நிறுத்த உள்ளோம். பால் கொள்முதல் செய்யமாட்டோம். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பால் வண்டிகளையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x