Published : 26 Dec 2022 04:32 AM
Last Updated : 26 Dec 2022 04:32 AM

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிச. 25-ம் தேதி (நேற்று) காலை நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 320 கி.மீ.தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, திரிகோணமலைக்கு தெற்கே இலங்கை கடற்கரையைக் கடந்து, பின்னர் மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து டிச. 26-ம் தேதி (இன்று) காலையில் குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைபெறும்.

இதனால் இன்று தென்தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் டிச. 27-ம் தேதி (நாளை) சில இடங்களிலும், வரும் 28, 29-ம்தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x