

சென்னையில் பேருந்துகளின்றி தவித்து வருபவர்களுக்கு, தன்னார்வ தொண்டர்கள் அவர்களை வீடுகளுக்குக் கொண்டுச் சேர்க்கும் பணியைச் செய்து வருகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, சென்னையில் பேருந்துகள் மிகவும் குறைந்தளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நள்ளிரவில் அலுவலகத்திலிருந்து திரும்பும் ஊழியர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.
அவ்வாறு சிரமத்துக்கு உள்ளாகி வருபவர்களை, அவர்கள் அடைய வேண்டிய இடத்துக்கு கொண்டுப் போய் சேர்க்கும் பணியில் சில தன்னார்வ ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து வருகிறார் பாஷத். இப்பணிக் குறித்து தொடர்பு கொண்ட போது, "என்னுடைய சமூகவலைத்தளத்தில் உதவலாம் என்று பதிவிட்ட போது, பலரும் அதற்கு தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அதில், எங்களுடைய ஏரியாவிலிருந்து யாரும் அவதியுற்றால் எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று தெரிவிக்கிறார்கள்.
என்னுடைய வாட்ஸ்- எண்ணுக்கு அவ்வாறு வரும் அழைப்புகளின் இடங்களை முன்வைத்து, அந்த ஏரியாவில் உள்ள தன்னார்வலர்களை வைத்து அவர்களுடைய வீடுகளுக்கு அல்லது எந்த இடத்தில் விடவேண்டுமோ அங்கு விட்டு வருகிறோம். இதில் சுமார் 100 தன்னார்வலர்கள் வரை பணியாற்றி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
நீங்கள் எங்கேயாவது பேருந்துகளின்றி காத்திருந்தீர்கள் என்றால் 8122000228, 9884269094 இந்த எண்களைத் தொடர்புக் கொண்டால் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.