கந்துவட்டி கொடுமை: திருப்பூரில் மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமை: திருப்பூரில் மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
Updated on
1 min read

திருப்பூரில் கந்துவட்டிக் கொடுமையால் மகனுடன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (இன்று) திங்கள்கிழமை மாவட்ட குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தனது மகனுடன் தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் தெற்கு போலீஸார், "அவிநாசி வட்டம் பெருமாநல்லூர் அருகேவுள்ள மொய்யாண்டான்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முக சுப்பிரமணி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் தொழில் நிமித்தமாக ரூ.10 லட்சம் கந்துவட்டிக்கு வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் இவரது வீட்டைச் சுற்றி வேலி அமைத்துள்ளனர் பணத்தை வட்டிக்கு கொடுத்தவர்கள். இதுதொடர்பாக பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது புகார் ஏற்கப்படவில்லை.

இதனால், மனமுடைந்த சண்முக சுப்பிரமணியின் மனைவி ருக்மணி அவரது மகன் செந்தில் குமாருடன் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

மறைத்து வைத்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணையை தங்கள் மீது ஊற்றி இருவரும் தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in