Published : 22 Dec 2016 09:03 AM
Last Updated : 22 Dec 2016 09:03 AM

ஏரிகளில் குறைவான நீர் இருப்பு: விவசாய கிணற்று நீரை கொண்டுவர சென்னை குடிநீர் வாரியம் திட்டம் - கோடை நீர் தேவையை சமாளிக்க நடவடிக்கை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் குறைந்த அளவே நீர் இருப்பதால், வரவிருக்கும் கோடையை சமாளிக்க விவசாய கிணற்று நீரை கொண்டுவர குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த சென்னை மாநகரம் தற்போது, 426 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. இதில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 71 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் பல லட்சம் பேர் வெளியூர்களில் இருந்து வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இவர்களுக்கான நீர் தேவையை சென்னை குடிநீர் வாரியம் பூர்த்தி செய்து வருகிறது. அதன் குடிநீர் ஆதாரமாக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஆகிய ஏரிகள் விளங்குகின்றன.

இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி நிலவரப்படி 9 ஆயிரத்து 868 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

சென்னை வானிலை ஆய்வு மைய இணையதள தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய இயல்பான மழைப்பொழிவு 556 மிமீ. ஆனால் 246 மிமீ மழைதான் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 56 சதவீதம் மழை குறைவு.

இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி நிலவரப்படி 1914 மில்லியன் கனஅடி நீர் தான் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 மடங்கு குறைவு. இதனால் சென்னையில், வரும் கோடை காலத்தில் போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சமாளிக்க, தனியார் ஆழ்துளை விவசாய கிணறுகளில் இருந்து நிலத்தடி நீரை கொண்டுவந்து விநியோகிக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மாநகருக்கு தினமும் 83 கோடி லிட்டர் குடிநீர் தேவை. நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இரு இடங்களில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் 20 கோடி லிட்டர் நீர் தினமும் கிடைக்கிறது. வீராணம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 18 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. மீதம் உள்ள 45 கோடி லிட்டர் நீர் தேவையை, திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் பூர்த்தி செய்கின்றன.

தற்போது ஏரிகளில் உள்ள கையிருப்பு நீர், சென்னையின் 4 மாத நீர் தேவையை பூர்த்தி செய்யும். அதன் பிறகு வரும் கோடைக்கால நீர் தேவையை சமாளிக்கும் விதமாக, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விவசாய ஆழ்துளை கிணறுகளில் இருந்து நிலத்தடி நீரை, சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஓராண்டுக்கு வழங்க, விலை நிர்ணயம் செய்வதற்காக ஒப்பந்தம் கோரியிருக்கிறோம். இதன் மூலம் சென்னையின் கோடைகால நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x