டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை வாய்ப்பு

டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை வாய்ப்பு

Published on

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கே சுமார் 480 கிமீ தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக 25-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும், 26-ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

24, 25-ம் தேதிகளில் தென்மேற்குவங்கக்கடல், அதனை ஒட்டிய இலங்கை கடலோர, தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும்மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in