ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை பெறும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பு: ரவிகுமார் எம்.பி. கேள்விக்கான பதிலில் அம்பலம்

ரவிக்குமார் | கோப்புப்படம்
ரவிக்குமார் | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: முஸ்லிம் மாணவர்களின் ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகையின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள தகவல், மக்களவையில் ரவிக்குமார் எம்.பி கேள்விக்கு மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அளித்த பதில் மூலம் அம்பலமாகி உள்ளது.

மக்களவையில் இன்று (டிச.23), விழுப்புரம் தொகுதி எம்பியான டி.ரவிகுமார் , "சிறுபான்மையினருக்கான ப்ரீ-மெட்ரிக் உதவித் தொகைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதா? 2013 முதல் 2021 வரை, ஆண்டு/மாதம் வாரியாக, ப்ரீ-மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களைத் தருக. இத்திட்டத்தை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளதா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மக்களவையின் கேள்வி நேரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அளித்த எழுத்துபூர்வமான பதிலில், ‘திட்டங்களை மறுசீரமைப்பு செய்வது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.அரசு உதவித்தொகை திட்டங்களின் கீழ் வருமான அளவுகோல்களைத் திருத்துவது உட்பட பல்வேறு அம்சங்களை அவ்வப்போது அமைச்சகம் சீராய்வு செய்கிறது.

2013-14 முதல் 2021-22 வரை ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையின் ஆண்டு வாரியான மற்றும் மதங்கள் வாரியான விவரங்கள் இணைக்கப்பட்ட அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன. ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை நிறுத்தும் யோசனை அரசுக்கு இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அளித்த இணைப்பு பட்டியல் மீது கருத்து கூறிய எம்பி ரவிகுமார், ‘அமைச்சர் ஸ்மிருதி இராணி கொடுத்திருக்கும் புள்ளி விவரத்தின்படி பாஜக ஆட்சிக்கு வந்த
2013-14 ஆம் ஆண்டில் 63 லட்சம் முஸ்லிம் மாணவர்களுக்கு ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் இது 58.69 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் 39.47 லட்சமாக அது குறைக்கப்பட்டிருக்கிறது. 2016 -17 இல் 30.72 லட்சம் ஆக மிக மோசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2017-18 இல் 40.6 8 லட்சம் மாணவர்களும் 2018-19 இல் 44.18 லட்சம் மாணவர்களும்; 2019-20 இல் 41.56 லட்சம் மாணவர்களும் இந்த உதவித்தொகையை பெற்றுள்ளனர். இந்த ஸ்காலர்ஷிப் 2020-21 இல் 39.13 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22 ஆம் ஆடில் 42.31 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 8 ஆண்டுகளில் ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை பெறும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் குறைக்கப்பட்டிருக்கிறது. பவுத்த மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2013-14 இல் 2.62 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட இந்த ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை, 2021-22 இல் 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த மாணவர்கள் 8.29 லட்சம் பேர் 2013 -16ல் ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை பெற்றுள்ளனர். ஆனால் 2021-22 இல் 7.27 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற்று இருக்கின்றனர்.

சீக்கிய மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும்தான் சற்றே அது உயர்ந்திருக்கிறது. 2013-14 இல் 3.98 லட்சம் பேர் ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை பெற்றுள்ளனர். 2021-22 இல் அது 5.07 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஜைன மதத்தைச் சார்ந்த மாணவர்கள் 2021-22 இல் 56691 பேர் மட்டுமே இந்த உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பாஜக அரசு சாகடித்து வருகிறது. குறிப்பாக முஸ்லிம் மாணவர்களின் படிப்பில் இந்த அரசு கை வைத்திருக்கிறது. அதைத்தான் இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன” எனக் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in