

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் திருமுண்டங்குடியில் இயங்கி வந்த ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் நடந்த நிதி மோசடியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலை கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை, வங்கியில் பெற்ற கடன் உள்ளிட்ட சட்டப்பூர்வ பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், ஆலை வேறொரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் பெயரில் வங்கியில் ஆலை நிர்வாகம் பெற்ற கடன் தொகை சுமார் ரூ.300 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை. கடனை திரும்ப செலுத்துமாறு விவசாயிகளுக்கு அரசு நோட்டிஸ் அனுப்பி, அச்சுறுத்தி வருகிறது.விவசாயிகள் கடன் பெற்றதாக மிகப்பெரும் மோசடி செய்துள்ள ஆரூரான் சர்க்கரை நிர்வாகமும், வங்கி அதிகாரிகளும் கூட்டாக ரூ.300 கோடியை அபகரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினையில் முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.