Published : 23 Dec 2022 04:00 AM
Last Updated : 23 Dec 2022 04:00 AM
ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை மண்டலம் காரணமாக, தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு-வடகிழக்கே 600 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்குத் திசையில் நகரக் கூடும்.
அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்குத் திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக டிச.22 மற்றும் 23-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீன் வளத் துறையினர் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால், வியாழக்கிழமை தமிழக துறைமுகங்களில் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. முன்னதாக மீன்வளத் துறையினர், மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்துள்ளதால் கடந்த திங்கள்கிழமையிலிருந்து நேற்று நான்காவது நாளாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் நேற்று பாம்பன், மண்டபம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT