Last Updated : 22 Dec, 2022 02:50 PM

 

Published : 22 Dec 2022 02:50 PM
Last Updated : 22 Dec 2022 02:50 PM

பேரிடர் சேதங்களை அரசே ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: "எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் வரும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது, இத்தகைய சூழலில் பேரிடர் சேதங்களை அரசு ஏற்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கழுமுகடாவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர்கள் சொந்தமாக மீன்பிடி படகுகள் வைத்துள்ளனர். இவர்களின் படகு 2018ல் கஜா புயலில் சேதமடைந்தது. இதற்கு முறையே ரூ.12 ஆயிரம், ரூ.17 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. கூடுதல் இழப்பீடு கேட்டு இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களின் படகுகள் லேசான சேதமடைந்துள்ளது. அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்: "தட்பவெப்ப நிலை மாறுதல் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உலகம் முழுவதும் காலநிலை மாறுதல் இருந்து வருகிறது. எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் வரும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் பேரிடர் சேதங்களை அரசு ஏற்க வேண்டும். அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது.

இயற்கை பேரிடருக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசு 2019ல் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி படகு முழுமையாக சேதமடைந்தால் ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சேதத்தை ஆய்வு செய்யும் குழுவில் ஆய்வில், மதிப்பீடு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற வேண்டும். ஆய்வின் போது பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை வைத்தே சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஆய்வின் போது பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கும் கருத்துகளை மனதில் வைத்து இழப்பீட்டு தொகையை முடிவு செய்ய வேண்டும். இழப்பீடு என்பது சட்டபூர்வமானது. நன்கொடையாக வழங்கப்படுவது இல்லை. இதனால் இழப்பீடு வழங்குவதை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். இயற்கை பேரிடர் சேத மதிப்பீடு என்பது தன்னிச்சையாக நடைபெறக் கூடாது. இதில் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையும் அடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்தக்காலில் நிற்கும் வகையில் அரசின் கொள்கைகளை அதிகாரிகள் வகுக்க வேண்டும்.

இந்த அளவு கோல் அடிப்படையில் மனுதாரர்களின் படகு சேதத்துக்கான மதிப்பீடு இல்லை. எனவே மனுதாரர்களுக்கு முறையே ரூ.1.38 லட்சம் ரூ.1.33 லட்சம் இழப்பீட்டு தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும்." இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x