Last Updated : 22 Dec, 2022 12:38 PM

1  

Published : 22 Dec 2022 12:38 PM
Last Updated : 22 Dec 2022 12:38 PM

மனித கழிவுகளை அள்ளும் பணியில் மனிதனை ஈடுபடுத்தினால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மனித கழிவுகளை அள்ளும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்கள் எவ்வித உபகரணங்கள் இல்லாமல் மனித கழிவுகளை அகற்றி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் கைகளால் மலம் அள்ளுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம், நிதி உதவி, குழந்தைகளுக்கு கல்வி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என 2014-ல் உத்தரவிட்டது.

இந்த வசதிகளைப் பெற மனித கழிவுகளை அகற்றுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் 169 பேர் மனித கழிவுகளை அகற்றும் பணியை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை. எனவே, அடையாளம் காணப்பட்டுள்ள மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், கைகளால் மனிதக்கழிவுகளை அகற்றுவோர்களை கணக்கெடுக்குவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களாக அறிவித்து சட்டப்படி நிவாரணம் வழங்கக்கோரி ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராஜன் மற்றும் அய்யா ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில்: "கைகளால் மலம் அள்ளும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க வேண்டும். இதற்காக கைகளால் மலம் அள்ளும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

மலக்குழி மற்றும் கழிவுநீர் தொட்டிகளை இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கைகளால் மலம் அள்ள தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம் 2013-ஐ கடுமையாக அமல்படுத்த வேண்டும். கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். இப்பணியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கைகளால் மலம் அள்ளும் தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். இழப்பீடு வழங்காமல் இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்." இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x