

சென்னை: சீனாவில் பரவும் உருமாறிய கரோனா தொற்று தொடர்பாகவும், தமிழகத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் அவசர ஆலோசனை நடைபெற்ற வருகிறது.
சீனாவில் BF.7 என்ற உருமாறிய கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் 430 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, ஹாங்காங் நாடுகளில் உருமாறிய கரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், அதன் பரவும் தன்மை முந்தைய தொற்றுகளை விட வேகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில், மருத்துவக் கல்வி இயக்குநர் , பொது சுகாதாரத் துறை இயக்குநர் , ஊரக நலப்பணிகள் இயக்குநர் , தேசிய நல வாழ்வு குழும திட்ட இயக்குநர் உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிப்பது, தமிழக விமான நிலையங்களில் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும் ஏற்பாடுகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் தொற்று உறுதியாகும் அனைத்து கரோனா மாதிரிகளும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுத்தவும் தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.