Published : 22 Dec 2022 07:17 AM
Last Updated : 22 Dec 2022 07:17 AM

திமுக அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: முதல்வர் தலைமையில் டிச. 28-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ``திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

அனைத்து நிர்வாகிகள், குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவில் செயல்பட்டு வரும் அணிகளின் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்கள்தோறும் கட்சியில் உள்ளது போன்ற நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் 15 லட்சம் பேருக்கு பதவிகள் கிடைக்கும்.

இப்பணிகளை அணிகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். இதுதவிர, வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இக்கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் அறிமுகம் என்பதுடன், மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கும் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது தொடர்பாக முதல்வர் நிர்வாகிகளிடம் கேட்டறிவார் என்றும், தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்துவார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x