

மதுரை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாம்பரம் - நெல்லை சிறப் புக் கட்டண ரயில் (06021) தாம்பரத்திலிருந்து நாளை (டிச.22)இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்று சேரும். மறு மார்க்கத்தில் நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில் (06022) டிச. 23 மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக் கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதிப் பெட்டிகள், 2 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதிப் பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்குப் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
மேலும், தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்புக் கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து டிச. 23 இரவு 7.30மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
சரக்கு பெட்டி இணைப்பு: இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய 2 அடுக்குப் படுக்கை வசதிப் பெட்டி, 11 2-ம் வகுப்புத் தூங்கும் வசதிப் பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்புப் பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய சரக்குப் பெட்டியும் இணைக்கப்படும். இவ் வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.