Published : 25 Dec 2016 10:10 AM
Last Updated : 25 Dec 2016 10:10 AM
வங்கிகளில் நிலவும் பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் எதிர்வரும் நாட்களில் பண்டிகைகளை எவ்வாறு கொண்டாடப் போகிறோம் என்ற கவலை பொதுமக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்டு 45 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீங்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல இப்பிரச்சினை தீரும் என பொதுமக்கள் நினைத்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி பிரச்சினை இன்னும் தீரவில்லை.
இந்நிலையில், வரும் நாட்களில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பணத் தட்டுப்பாடு பிரச்சினையால் பண்டிகை களை எவ்வாறு கொண்டாடப் போகிறோம் என்ற கவலை அவர்கள் மனதில் ஏற் பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே துணிமணிகள் உள்ளிட்டவற்றை வாங்குவோம். ஆனால், தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், புத்தாண்டு தினத்தன்று வீட்டுக்குத் தேவையான டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் சிறப்புத் தள்ளுபடியில் கடைகளில் விற்பனை செய்யப்படும். வருடம்தோறும் இவ்வாறு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்குவோம். ஆனால், இந்த ஆண்டு இப்பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT