Published : 16 Dec 2022 07:35 PM
Last Updated : 16 Dec 2022 07:35 PM

கரூர் | சிறுமியை கடத்தி, திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்.

கரூர்: கரூரில் சிறுமியை கடத்தி, திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் மற்றும் உடந்தையாக இருந்த பெற்றோருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கரூர் அருகேயுள்ள ஆத்தூர் பிரிவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவி சுமதி. இவர்கள் மகன் கவுசிக்குமார் என்ற கவுசிக் (20). கூலித்தொழிலாளி. கரூர் சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்த 14 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கவுசிக்கிற்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துக்கொள்வதாகவும் கூறி கடந்த 2021 செப். 29 சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று அங்குள்ள கோயிலில் கவுசிக் திருமணம் செய்துள்ளார். கவுசிக்கின் தந்தை சரவணன், தாய் சுமதி திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியை காணாததால் அவர் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்தாண்டு அக்.4-ல் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு போலீஸார் விசாரணை நடத்தி கவுசிக்குமாரை அக்.9-ல் கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியப்போது சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார்.

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமாபானு இன்று (டிச.16) வழங்கிய தீர்ப்பில், கவுசிக்கிற்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும், போக்சோவின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்தார்.

மேலும், சரவணன், சுமதிக்கு குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும், போக்சோவின் கீழ் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதம், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்து தண்டனைகளை 3 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x