அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க: விஜயகாந்த்

விஜயகாந்த் | கோப்புப் படம்
விஜயகாந்த் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதால், பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக் கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இவர்களில், கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2014-ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், 2017-ம் ஆண்டு ரூ.700-ம், கடைசியாக 2021-ம் ஆண்டு ரூ.2300 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தோடு அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

தேர்தலுக்கு முன்பாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களை தற்போது வரை பணி நிரந்தரமும் செய்யவில்லை, சம்பளத்தையும் உயர்த்தவில்லை.

மேலும், பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் போன்றவை இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in