Published : 16 Dec 2022 06:19 AM
Last Updated : 16 Dec 2022 06:19 AM

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏ.சி. தீப்பிடித்து தொழிலதிபர் உயிரிழப்பு

சுரேஷ் குமார்

சென்னை

ஏ.சி. இயந்திரம் தீப்பிடித்த விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலதிபர் உயிரிழந்தார். சென்னை சூளைமேடு, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் கட்டுமான நிறுவன தொழில் அதிபர் சுரேஷ்குமார்(52). இவரது மகன் ஸ்டீபன் ராஜ். மருமகள் சுஜிதா. பிரசவத்துக்காக சுஜிதா வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் தங்கியிருந்தனர். வீட்டில் சுரேஷ்குமார் மட்டும் இருந்துள்ளார்.

அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஏசி போட்டு தூங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் அவரது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடம் விரைந்தனர். தகவலறிந்து சூளைமேடு போலீஸாரும் நிகழ்விடம் சென்றனர்.

போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்திருந்தது. உள்ளே, சுரேஷ்குமார் உடல் கருகி சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து சூளைமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x