அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் 192 பேருக்கு விருப்பப்படி பணியிட மாறுதல்: உயர் கல்வித்துறை தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் பணியிட மாறுதலுக்காக 569 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 192 பேராசிரியர்களுக்கு அவர்கள் விருப்பப்படி தேர்வு கல்லூரிகளுக்கு வெளிப்படையான பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்படவுள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு இறுதியாக 2018-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கல்லூரி போராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் சங்கங்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இதனை பரிசீலித்த தமிழக அரசு, தமிழக முதல்வரின் அறிவுறுத்தல் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இணைய வழி இடமாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்பான அரசாணையை 08.11.2022 அன்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து, www.tngasa.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டன.

மொத்தம் பெறப்பட்ட 569 விண்ணப்பங்களில் காலிப்பணியிடமின்மை மற்றும் 50 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் பேராசிரியர்கள் பணிபுரியும் இடங்கள் ஆகிய காரணிகள் தவிர 192 பேராசிரியர்களுக்கு அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்த அரசு கல்லூரிகளுக்கு வெளிப்படையான பணியிடமாறுதல் ஆணைகள் வழங்கப்படவுள்ளன.அதன் அடையாளமாக 10 கல்லூரி பேராசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை இன்று (டிச.15) ஆணைகளை வழங்கினார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in