

தாம்பரம் அருகே உள்ள கூடுவாஞ்சேரி நந்திவரம் ஏரி உடையும் அபாயத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் எழுப்பியதைத் தொடர்ந்து, ஏரியை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கூடுவாஞ்சேரி நந்திவரம் ஏரியில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்புகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டன. இதில் ஒரு பகுதி போக்குவரத்து பயன்பாட்டால் அழுந்தி, உயரம் குறைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது பெய்த புயல் மழையின் காரணமாக, ஏரியில் நீர் உயரும்போது, ஏரி உடையும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். உயரம் குறைந்த கரைப் பகுதியில் மண் கொட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏரியில் நீர் மட்டம் குறைவதற்காக ஏரி கலங்கல் பகுதியில் சிறு உடைப்பு ஏற்படுத்தியும் நீரை வெளியேற்றினர். தற்போது ஏரி, பாதுகாப்பாக உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.