மதுரை | விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்

கார்த்திக்
கார்த்திக்
Updated on
1 min read

மதுரை: விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் 5 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(32). கடந்த 12-ம் தேதி இவர் பைக்கில் நத்தம் பாப்பாபட்டி விலக்கில் இருந்து செல்லும்போது பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துமவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், டிச.13-ம் தேதி இரவு மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது மனைவி விசாலாட்சி மற்றும் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். அதன் அடிப்படையில் அவரது இதயம், கல்லீரல், நுரையீரல்கள், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானம் பெறப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை உட்பட தமிழகத்தில் உள்ள 5 மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் கார்த்திக் உடல் உடற்கூராய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் உறுப்புகளை விரைவாக விமானம், சாலை மார்க்கமாக செல்வதற்கு உதவிய போலீஸாருக்கு டீன் ரத்தினவேலு பாராட்டு தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in